நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளியிடும்போது, என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியல் ஒன்றை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்போது ஜெயராம், ஸ்ரீராம், பாரத் மாதாஜி கி ஜே உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்து விளக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் மிக தாழ்ந்த சாதி எது? என கேட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
![’இலங்கைபோல் பாஜக அரசை மக்களே ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தும் காலம் வரும்’..! திருமாவளவன்](https://1newsnation.com/wp-content/uploads/2020/10/Thiruma.jpg)
சாதி இல்லை எனக் கூறிவரும் நிலையில், இது சனாதனத்தின் உச்சமாக கருதப்படுகிறது. இதற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் சேவைக்கும் வருங்காலங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இலங்கையில் சிங்கள மக்களுக்காக எனக் கூறி ஆட்சி செய்த ராஜபக்சேவை சிங்கள மக்களே அடித்து துரத்தி உள்ளதை நாம் கண்டு வருகிறோம். அதே நிலைமை இந்து மக்களுக்காக ஆட்சி செய்வதாக கூறும் பாஜக அரசை இந்து மக்களே ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தும் காலம் வரும்.