நடப்பு 2023 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் வளர்ச்சியில் சரிப்பாதியை இந்தியாவும் சீனாவும் பங்குக்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது. பல நாடுகளின் பொருளாதாரம் மைனஸில் சென்றது. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் நிலைமை ஓரளவு சீரானது. இந்நிலையில், 2023ம் ஆண்டு உலக நாடுகளின் நிலை எப்படி இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. அதாவது இந்த ஆண்டு உலகம் முழுவதும் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில்தான் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இது இந்த ஓராண்டுக்கு மட்டும் அல்லாது அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பொருந்தும். அதாவது 2028 வரை உலகம் முழுவதும் 3%க்கும் குறைவான அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனவும் ரஷ்ய-உக்ரைன் மோதல் போக்கு இந்த ஆண்டும் நீடிக்கும் எனவும் கூறியுள்ளார். குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் வளர்ச்சி 3 சதவிகிதமாக நீடிக்கும். கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவு குறைவான வளர்ச்சி இருக்கும் என நாங்கள் அறிவிப்பது இதுதான் முதல் முறை. அதேபோல கடந்த 20 ஆண்டுகாளாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை எடுத்து அதன் சராசரியை கணக்கிட்டு பார்த்தால் இந்த காலகட்டங்களில் உலகம் 3.8% வளர்ச்சியை கடக்கவில்லை என்பதை உணரலாம்
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா-சீனா ஆகிய நாடுகள்தான் இந்த ஆண்டு உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சரி பாதியை கொண்டிருக்கும் எனவும் கொரோனா தொற்று அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆகிய காரணங்கள்தான், இந்த பொருளாதார சரிவுக்கு காரணம். இதனால் பசி மற்றும் வறுமை முன்பைவிட அதிகமானதாக இருக்கும். அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் 90% வளர்ச்சியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் இந்த ஆண்டு சரிவை சந்திக்கும். அதேபோல குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் ஏற்றுமதியில் சிக்கலை சந்திக்கும். எனவே அதிக அளவில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும்” என்றும் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.