ரூ.800 கோடி மதிப்பிலான TMT கம்பிகள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டிஎம்டி கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய வரி செலுத்துபவர்களின் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விசாரனையில் விலைப்பட்டியல் இல்லாமல் TMT கம்பி விற்பனைக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விற்பனையில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் ரொக்கப்பண அடிப்படையிலேயே நடைபெற்று இது குறித்த தகவல்களை அதற்குரிய GST வரி அதிகாரிகளிடம் அறிவிக்காமலேயே நடந்துள்ளது.
இந்த சட்ட விரோத பணப்பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.834 கோடி ஆகும். இதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரியாக சுமார் ரூ.150 கோடி வரையில் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியாத வண்ணம் அந்தந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் நடைபெறாமல் ரகசிய இடத்தில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. தொடர்ந்து விசாரணையில், விநியோகச் சங்கிலி அமைப்பில் மிகப்பெரிய அளவில் சட்ட விரோதமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பது இந்த சோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சட்ட ரீதியில் தண்டிக்கப்படக்கூடிய வகையிலான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகத்தின் முதன்மை கூடுதல் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்