தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவுகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு (செப்டம்பர் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அதன்படி கார்களுக்கான கட்டணம் 45 ரூபாயிலிருந்து 5 ரூபாய் அதிகரித்து, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு 78 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கான கட்டணம், சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 495 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.