ஆந்திர மாநிலம், அனக்காப்பள்ளி மாவட்டம், காசிம்கோட்டா அருகே உள்ள பாலத்தின் அடியில், ரத்தக்கறை உள்ள பெட்ஷீட் ஒன்றை வைத்து சுற்றப்பட்ட மூட்டை கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அனகாப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த மூட்டையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடந்தது. மேலும், ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில், தலை மற்றும் உடல் பாகங்கள் கிடந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த நபர், அனகாபள்ளி கவரபாளையத்தை சேர்ந்த சேர்ந்த 40 வயதான திலீப் என்கிற தீபு என்ற திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. இவரும், மேற்கு கோதாவரி மாவட்டம் இரகவரம் பகுதியை சேர்ந்த 35 வயது பன்னி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நாகலாபள்ளியில் தம்பதி போல் ஒன்றாக வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, உணவு டோர்டெலிவரி தொழிலாளியான பன்னியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். அப்போது, பன்னி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக திருநங்கை தீபுவுடன் வசித்து வந்த பன்னிக்கு தீபுவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல் கடந்த 17ம்தேதி இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னி, வீட்டில் இருந்த கத்தியால் திருநங்கை தீபுவை சரமாரி வெட்டிக்கொலை செய்தார். பின்னர், சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் கட்டி, 2 இடங்களில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.