தமிழில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்பாக கடந்த 2008ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ’குருவி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உதயநிதி சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த இவர், 2012இல் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன்மூலம் உதயநிதி ஒரு நடிகராக இளைஞர்கள் முன் வலம் வர தொடங்கினார். அதன்பிறகு பல படங்கள் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அதற்கு முன்பு சினிமாவில் மட்டும் முழு வீச்சாக இருந்து வந்த இவர், அப்போது தான் அரசியலிலும் குதித்தார். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என தன்னை பிஸியாக வைத்து கொண்ட இவர், கடந்த 2021இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போதே இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், இவருக்கு கொடுக்கப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், தனது நடிப்பை விடவில்லை.

இந்தி படத்தின் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ இந்த ஆண்டு வெளியானது. இது இவரை மற்றொரு அத்தியாயத்திற்கு கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து அண்மையில் ‘கலகத் தலைவன்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் அண்மையில் வெளியானது. முன்னதாக தயாரிப்பாளராக இருந்து, படம் வெளியீட்டாளராக இருந்து, பின்னர் நடிகராக மாறி, எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் ‘மாமன்னன்’ படம்தான் தனது கடைசி படம் என்றும், கமல் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.