தஞ்சையில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, “சினிமாவில் கூறப்படும் பாலியல் குற்றங்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று புகார் தெரிவித்தால் கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள எந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தாலும் நடிகர் – நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.
விஜய் அரசியலில் குதித்து விட்டார். இனிமேல் தான் அவருக்கு சோதனை வரும். அவர் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு நிறைய அரசியல்வாதிகள் வேலை செய்வார்கள். இனி அவர் உஷாரா இருக்க வேண்டும். உங்கள் திறமை இனிமேல் தான் நிரூபிக்கப்பட வேண்டும். அரசியலில் குதிப்பதற்கு சினிமா புகழ் அஸ்திவாரம். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர் பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
ஆட்சியாளர்கள் தவறு செய்தால் துணிந்து தட்டி கேட்கிறீர்களா? என மக்கள் கவனிப்பார்கள். அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. சீமான், அண்ணாமலை போன்றவர்கள் மக்களை சந்தித்து பேசி வாக்கு வாங்கியை அதிகரித்துள்ளனர். விஜய் சாருக்கு அப்படி இல்லை ஒரு அறிக்கை போதும் 10% வாக்கு வங்கி கிடைத்திடும். சீமான், அண்ணாமலை போன்றவர்கள் கஷ்டப்பட்டு 10 ஆண்டுகளாக வளர்த்ததை பத்து மாதங்களிலேயே விஜய் பெற்று விட்டார். ஆட்சி அமைப்பதற்கு இது பத்தாது மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும்” என்றார்.
Read More : பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான்..!! அட CWC-இல் இருந்து இவரா..?