நடிகர் விஜய் ஒரு பக்கம் தன்னுடைய திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு புறம் அரசியலில் கால் பாதிக்கும் நேரத்தையும், எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் அடிக்கடி அரசியல் நோக்கத்துடன் பல்வேறு செயல்களை தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தினரை வைத்து செய்து வருகிறார். ஏற்கனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல ஆண்டுகளாகவே உணவு, உடை போன்ற உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்கள், சமீபத்தில் விஜய்யின் அறிவுறுத்தல் படி, அரசியல் தலைவர்கள் பிறந்தநாளில், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், பட்டினி தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்கினர்.
மேலும், இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடித்த, மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். குறிப்பாக, பன்னிரெண்டாம் வகுப்பில் 600 / 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியதுடன், ஊக்கத்தொகையும் கொடுத்தார் விஜய். அதே போல் இந்த நிகழ்ச்சியில் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயங்களும் கவனத்தை ஈர்த்தது.
ஒரு தரப்பினர் விஜய்யின் இந்த செயல்களை பாராட்டி வந்தாலும், மற்றொரு தரப்பினர் இப்படி செய்வதால் மட்டுமே விஜய் அரசியல் வாதியாக மாற முடியாது. தேர்தலில் நின்று வெற்றி பெற கட்சியில் தீவிரமாக இறங்கி பணியாற்ற வேண்டும் என தெரிவித்து வந்தனர். விஜய்யும் தீவிர அரசியலில் இறங்கும் முயற்சியில் இருப்பதால் தன்னுடைய 68-ஆவது படத்தில் நடித்து முடித்த பின்னர், 3 வருடங்கள் முழு அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும் சில தகவல்கள் வெளியான நிலையில் தற்போது, விஜய் நாளை காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதை அறிவிப்பாரா? என கேள்விகள் எழுந்துள்ளதால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.