கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜாக்குலின். அந்தத் தொடரின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கினார். தற்போது, இவர் வீடியோ ஜாக்கி என்று சொல்லப்படும் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கான காரணத்தையும் தனது யூட்யூப் சேனலில் பதிவு செய்துள்ளார் ஜாக்குலின்.
இதுகுறித்து தனது சேனலில் பதில் அளித்து இருக்கும் ஜாக்குலின் விஜே யாக பணியாற்றும் காலங்களில் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் தங்களை பெரிய பிரபலங்களாக நினைத்துக் கொண்டு அனுமதி இல்லாமல் தொடுவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் செய்யும் செயல்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் அருவருப்பாக இருப்பதோடு அவர்களின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று ஆத்திரமும் ஏற்படும் எனவும் கோபத்துடன் பதில் அளித்திருக்கிறார் ஜாக்குலின்.