தேசிய அளவில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு முகாம் இன்று முதல் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வைட்டமின் “A” என்பது விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து ஆகும். இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் வகையைச் சார்ந்தது. இது பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வைட்டமின் “A” நோய் எதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
தினசரி உணவில் தேவையான அளவு வைட்டமின் “A” அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். விலங்குகளின் கல்லீரல், மீன் எண்ணெய், மீன் முட்டை இறைச்சி. மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் கரும்பச்சை கீரைகள். குடைமிளகாய், ப்ரக்கோலி போன்ற உணவுகள் வைட்டமின் “A” நிறைந்த உணவுகளாகும். வைட்டமின் “A” குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய், உலர்ந்த கண் கீழ் இமை படலம், பிட்டாப் புள்ளிகள், உலர்ந்த விழித்திரை, கண்பார்வை இழப்பு மற்றும் வளர்ச்சி குறைபாடு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று, ஜீரண மண்டல நோய்த்தொற்று, தட்டம்மை, மலட்டுத்தன்மை, தோல் பிரச்சனைகள் ஏற்படும். வைட்டமின் “A” குறைபாட்டினால் ஏற்படும் பார்வையிழ்பபை தடுப்பதற்காக ஆண்டு தோறும் இருமுறை (ஆறு மாத இடைவெளியில்) வைட்டமின் “A” திரவம் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.
ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இன்று முதல் 22.03.2025 வரை முகாம் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் கொடுக்கப்படுகின்றது. தற்பொழுது நடைபெறும் முகாமில் குழந்தைகளுக்கு வைட்டமின் “A” திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 ml மற்றும் 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 ml (200000 IU) கிராம நகர சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், SHA பணியாளர், இரண்டாம் ஆண்டு ANM பயிற்சி மாணவியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் மூலம் அங்கன்வாடி மையங்களில் வைத்து வைட்டமின் “A” திரவம் வழங்கப்படுகிறது.
இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர். சிக்கல் நிறைந்த இடங்களில் (மலைப்பகுதிகள், நாடோடிகள், நரிக் றவர்கள். கட்டுமான தொழிலாளர்கள், மீனவர் வசிப்பிடங்கள். நகர குட்டைபகுதிகள், 80%-க்கு கீழ் தடுப்பூசி செலுத்திய குழந்தைகள் உள்ள வசிப்பிடங்கள்) உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு முகாமும் நடத்தப்படுகின்றது. அரசு வழங்கும் வைட்டமின் “A” திரவம் தரமானது, பாதுகாப்பானது.
எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தங்கள் வீடுகளில் உள்ள 6 மாதம் முதல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று முதல் 22.03.2025 வரை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் வைட்டமின் “A” திரவம் வழங்கும் முகாமில் திரவம் வழங்கி, உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் “A” குறைப்பாடு இல்லாமல் தடுத்து, அதன் மூலம் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.