கடந்த சனிக்கிழமை, எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வெளியே வரும் பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தம்முடன் பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது “திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசினார்.
தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி. “சின்னமாவுக்கு துரோகத்தை பண்ணியவர், 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உடன்வந்தவர் அவரது செல்போனை பறித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது..
இதனிடையே திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து காவல் உதவி ஆணையர் சசிகுமாரிடம் புகார் வழங்கியிருந்தார். அதேபோல ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக பேசியபோது அவருடைய நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி, செல்போனை பறித்தாகவும் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் அவருடைய உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து புகார் வழங்கியிருந்தார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி அவருடைய நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.. மேலும் அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஸ்வரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதில் கலந்துகொண்டு பேசினார்.. அப்போது “ துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தைரியமாக மதுரைக்கு வந்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. ஆனால், இப்போது ஏவல் துறையாக உள்ளது. திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டும் தலைவராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனை பொறுக்க முடியாமலே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரையில் தொடங்கி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் வெறும் முன்னோட்டம் தான். மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்கு போக நாங்கள் பயப்பட மாட்டோம்.. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். எங்களிடம் இது போன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது. எடப்பாடி பழனிசாமி மீது பொய்வழக்கு பதிவு செய்யும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் எனில், மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்..” என்று ஆக்ரோஷமாக பேசினார்.. அவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.