பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னையில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன். ஆனால், தமிழில் மட்டும் 85, 90 மதிப்பெண்கள் எடுத்துவிடுவேன். எனக்கு இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் உண்டு. மேலும், கலைஞர் கருணாநிதியின் பேச்சு, எழுத்து தான் இதற்கு முக்கிய காரணம். முரசொலியை படித்து தான் எனது தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

முன்காலங்களில் நூலகம் என்றாலே பழமையான கட்டிடம் தான் நமது சிந்தனைக்கு வரும். அப்படிப்பட்ட மனநிலையை மாற்றியவர் கருணாநிதி. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தை அறிவு தளத்தில் ஒரு படி மேலே உயர்த்தியது. இன்று அதேபோல், தென் தமிழகத்தில் மதுரையில் அறிவு மாற்றத்திற்காக ரூ.115 கோடியில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார் முதல்வர் முக.ஸ்டாலின். விரைவில் அந்த நூலகம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதே போன்று திமுக இளைஞரணி சார்பில் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி உள்ளோம். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியுள்ள அன்பகம் நூலகத்தை ஆர்வமுள்ள இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று எனது சொந்த தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகம் மற்றும் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.