அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “மாணவர்களின் Blessings-ஆல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்றும், குலக்கல்வியை எதிர்த்ததால் தான் காமராஜர் முதலமைச்சரானார் என்றும், பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கான அடித்தளமிட்டு, கல்வியில் தனிக் கவனம் செலுத்தியவர் காமராஜர்” என்றும் குறிப்பிட்டார்.
![அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/202204281302402673_All-Political-Parties-Worked-together-during-in-Thanjavur_SECVPF.jpg)
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பிய உடன் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைப்பார் என்றும், அவருடைய உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், அரசுப் பள்ளிகளில் மீண்டும் லேப்டாப் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
![அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/Laptop.jpg)
திமுகவின் தேர்தல் அறிக்கையில் Tab வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், அதிகாரிகளிடம் விவாதித்ததில் லேப்டாப் தான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் டேப் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக லேப்டாபே தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப்புகள் மாநிலம் முழுவதும் வழங்கப்படாத நிலையில், தற்போது 11 லட்சம் லேப்டாப்புகள் வழங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.