தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை வெளியிட்ட தகவலில் ஏதாவது ஒரு ஆதாரமாவது இருந்ததா. மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த எக்ஸ் எல் ஷீட் தயாரிக்கவா 4 மாதங்கள் ஆனது. ‘எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர்.’ என்று அவர் கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ. 3.75 லட்சம். இந்த வாடகை யார் கொடுக்கிறார். காருக்கு டீசல் யார் அடிக்கிறார்.
4 ஆடுகள் மேய்த்தால் ரூ.3.75 லட்சம் வாடகைக்குக் குடியிருக்க முடியும் என்று சொல்ல வருகிறாரா?. ‘என் மனைவி என்னை விட பல மடங்கு சம்பாதிக்கிறார்’ என்று கூறினார். அப்படி இருக்கையில் எதற்காக அடுத்தவர்களின் பணத்தில் வாழ வேண்டும். படையப்பா படத்தில், ‘மாப்பிள்ளை அவர் தான்.’ வசனம் போல, பயன்படுத்துவது நான். ஆனால் எல்லாம் மற்றவர்களுடையது என சொல்ல ஒரு அரசியல்வாதியாக அசிங்கமாக இல்லையா?. கட்சி தேசியக் கட்சியாக இருக்கலாம். ஆனால், இங்கிருப்பவர் கோமாளி தலைவர். அவரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அடுத்தத் தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்கப் போகிறார்கள் என பணியாற்ற வேண்டும். சாப்பாடு, சம்பளம், கார், வீடு எல்லாம் ஓசி, மண்டையில் இருக்கும் மூளையும் ஓசி என நினைக்கிறேன். அந்த வாட்சை ஒருவர் ரூ.4.5 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அவரிடமிருந்து அதை ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாகவும் சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது. வாட்ச் நம்பரையும் மாற்றி மாற்றி சொல்கின்றார். ஒரு வெகுமதியை, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார்” என்றார்.