கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு கூறியுள்ளார்.
ஆனால், கவுஷா பாஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்த நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கவுஷா பாஷா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் வெளியானது.
அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜிதா பானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார். அவர் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் கவுஷா பாஷா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மனைவி ஷாஜிதா பானு, கணவர் என்று கூட பாராமல் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஷாஜிதா பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : பெற்றோர்களே..!! குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் முன் இந்த Settings-ஐ மாற்ற மறந்துறாதீங்க..!!