வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று நாகை, மயிலாடுதுறை திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல் நாளை (ஜனவரி 10) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.