பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் 27 வயதான மீனாட்சி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த மீனாட்சி, கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது மகனுடன் சென்னை கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது தாயுடன் வசித்து வந்த மீனாட்சிக்கு ஒரு கட்டத்தில் தனது சொந்த மகனையே பிடிக்கவில்லை. தனது மகனை பார்க்கும் போதெல்லாம், தனது கடந்த காலம் நியாபகம் வருவதாகவும், மேலும், தனது மகன் இருப்பதால் தன்னால் மறுமணம் செய்துக் கொள்ள முடியவில்லை என்றும் மீனாட்சி நினைத்துள்ளார். இதனால் அவர் தனது சொந்த மகனையே கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, அவர் தனது 6 வயது மகனை ஸ்குரூ டிரைவரால் அடித்து மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், சிறுவனின் முகத்தில் தலையனையால் அழுத்தி அவரை கொலை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், தனது மகனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். தனது சொந்த மகனின் உடல் எரிந்த நிலையில், அந்த உடலை வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்க் கால்வாயில் வீசியுல்ல்ளார்.
ஒரு சில நாட்களில், அந்த கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கால்வாயில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மீனாட்சியின் மகன் மாயமானது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மீனாட்சியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மீனாட்சி தனது மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீனாட்சி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.