சிவகாசி அம்மன் கோவில்பட்டியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். பிளஸ்-2 வரை படித்த இவர், சாமிபுரம் காலனியை சேர்ந்த 23 வயதான அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி இவர் அருணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தநிலையில், திருமணமான ஒரே வாரத்தில் அந்த பெண்ணிற்கு தனது கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இளம்பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், ஒரு வாரம் கடந்த பின்பு சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த 21 வயதான தமிழ் வளவனை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ஓரிரு நாட்களில் வெளியே சென்ற இளம்பெண், வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால் இளம்பெண்ணின் தாய், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணை அவரது முதல் கணவர் கடத்தியிருக்கலாம் என இளம்பெண்ணின் சகோதரர் பால்பாண்டியும், 2-வது கணவரும் நினைத்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் தங்களது நண்பர்களுடன் அருண் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அருணை அரிவாளால் தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதோடு கை மணிக்கட்டை துண்டாகியுள்ளனர்.
அருணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இதையடுத்து, அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்த அருணை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பால்பாண்டி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.