ஜாதி மற்றும் பாகுபாட்டை நாம் ஒழித்தால், உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மும்பை ஜாம்னரில் நடந்த ‘பஞ்சாரா கும்ப் 2023’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்; நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை அகற்ற வேண்டும், பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, அப்போது உலகில் எந்த சக்தியாலும் நமது முன்னேற்றத்தை தடுக்க முடியாது. கட்டாய மதமாற்றம் செய்யும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மத மாற்ற குற்ற செயல்களுக்கு எதிராக தனது மாநிலத்தில் கடுமையான சட்டம் இருப்பதாக கூறினார்.
நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டம் நவம்பர் 2020 இல் நடைமுறைக்கு வந்தது. வஞ்சக மனப்பான்மை கொண்ட சிலர் மத மாற்றங்களைச் செய்கிறார்கள், ஆனால் அவர்களைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில், இப்போது யாரும் மத மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால், குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருப்பினும், சில மதம் மாறியவர்கள் திரும்பி வர விரும்பினால் அத்தகைய நபர்களுக்கு சட்டம் பொருந்தாது என்றார். உலகின் மிகப் பழமையான மதம் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும் ‘சனாதன தர்மம்’ மூலம் நாடு ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.