கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே, இளம் பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் கொடுமை செய்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள, டி. அகரம் கிராமத்தைச் சார்ந்த காயத்ரி (25) என்ற இளம் பெண்ணுக்கும், அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது.
இதில் வீரமணி திருமணத்திற்கு முன்பாக வீடு கட்டவில்லை என்றும், திருமணத்திற்கு பின்னர் வீடு கட்டி விடலாம் என்று காயத்ரியின் பெற்றோர்களிடம் தெரிவித்து, காயத்ரியை திருமணம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. காயத்ரி, வீரமணி தம்பதிகளுக்கு, ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது, ஒரு குழந்தையும் பிறந்து விட்டது இன்னும் வீடு கட்டவில்லையே என்று வீரமணியிடம் காயத்ரி விவாதம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த பிரச்சனையில், வீரமணி, உன் அப்பா வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என்று தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையே இந்த வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியது. இதில், வீரமணி குடும்பத்தினர் அனைவரும், ஒன்று இணைந்து, காயத்ரியிடம் அவர் அணிந்திருந்த தாலியை பிடுங்கிக் கொண்டு, அவரை வீட்டை, விட்டு துரத்தி உள்ளனர். அதன் பிறகு, தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்த காயத்ரி மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இதன் காரணமாக, காயத்ரியின் தந்தை விஸ்வலிங்கம் இந்த விவகாரம் குறித்து, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
அங்கே, இரு குடும்பத்தாரும் ஆஜராகி, காவல் நிலையத்தில் காவல்துறையினர், இரு குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, வீரமணியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், வீடு கட்டிய பிறகு மருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து விட்டனர். ஆனாலும், காயத்ரியிடமிருந்து பிடுங்கிய அவருடைய தாலியை மட்டும் வீரமணியின் குடும்பத்தார் திருப்பி தர மறுத்து விட்டனர். இதனால், காயத்திரி விரக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த காயத்ரி, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தும், அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, காயத்ரியின் தந்தை விஸ்வலிங்கம் காவல்துறையில் புகார் வழங்கியதால், அதன் அடிப்படையில், காவல்துறையினர் வீரமணியின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்கள்.