நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய – மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை பெற ரேஷன் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஒருவேளை இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிகிறது.
ரேஷன் கார்டுடன் இகேஒய்சி சரிபார்ப்பது எப்படி..?
* முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட்டு உள் நுழைய வேண்டும்.
* பின்னர், நீங்கள் பதிவு செய்திருந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதை பதிவிட வேண்டும்.
* பின்னர், ஆதார் எண்ணை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
* அது ஆதாருடன் இணைந்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பின் இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும்.
* ஒருவேளை இது செய்ய முடியாவிட்டால், அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளுக்கும் சென்று இந்தப் பணியை முடித்துக் கொள்ளலாம்.
* இந்தப் பணியை மார்ச் 31ஆம் தேதிக்கு முடிக்காவிட்டால், ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதோடு, ரத்தாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.