வேலை தர மறுத்த நிறுவனத்தின் மீது இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவ தினத்தன்று பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பெட்ரோல் பங்கின் மீது வீசி உள்ளார். இதில் அந்த குண்டு வெடித்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் மூலம் குண்டு வீசிய நபரை அடையாளம் கண்டு கொண்டனர்.
இதனையடுத்து பரமக்குடி அரசு ஐடிஐ அருகில் வசித்து வந்த கணேசன்(35) என்ற இளைஞரை கைது செய்தனர். இவர்தான் பெட்ரோல் பங்கில் குண்டு வீசியிருக்கிறார் என்பது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கணேசன் தான் பலமுறை வேலைக்காக அந்தப் பெட்ரோல் பங்கிற்கு சென்றதாகவும் அவர்கள் தொடர்ந்து தன்னை நிராகரித்து வந்ததால் அந்த விரக்தியில் குண்டு வீசியதாகவும் தெரிவித்திருக்கிறார்.