சிறுநீரகக் கல் வந்துவிட்டால், பலருக்கும் முதலில் வரும் சந்தேகம் உணவு பற்றித்தான். குறிப்பாக, தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் அதிகமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு மருத்துவர்கள் வேறு விளக்கத்தை கூறுகின்றனர். தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அளவோடு சாப்பிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீரகக் கற்கள் என்பது, சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் ஒன்றுசேர்ந்து கடினமான படிகங்களாக மாறுவதால் உருவாகும் நிலையாகும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக உப்பு உணவுகளை சாப்பிடுவது, மரபணு காரணிகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம். சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் அமரேந்திர பதக் கூறுகையில், சிறுநீரகக் கற்களில் பெரும்பாலானவை கால்சியம் ஆக்சலேட் கற்கள் என தெரிவித்துள்ளார். தக்காளியில் சிறிய அளவில் ஆக்சலேட் இருந்தாலும், அதற்காக தக்காளியை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
அதே நேரத்தில், அடிக்கடி கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகும் நபர்கள், தங்களின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், சிறுநீர் அடர்த்தியாகி அதில் உள்ள தாதுக்கள் படிந்து கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், அதிக உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைக்கோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. எனவே, சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலும் தவிர்க்காமல், அளவோடு சாப்பிடலாம். இருப்பினும், ஒவ்வொருவரின் உடல்நிலையும், சிறுநீரகக் கல் வகையும் மாறுபடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறையை பின்பற்றுவது சிறந்தது.
Also Read: பெரிய முதலீடு தேவையில்லை… பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில்!



