சோமாலியாவின் புன்ட்லான்ட் கடற்கரை அருகே துருக்கி நாட்டு ராணுவ ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சிக்கியுள்ளனர்.
கமரூன் நாட்டு கொடியுடன் இயங்கும் ‘எம்/வி லுடுப்’ (M/V LUTUF) என்ற இந்த சரக்குக் கப்பல், சோமாலியாவின் புன்ட்லான்ட் பகுதியில் உள்ள எய்ல் மாவட்டத்தில் உள்ள மர்ரா என்ற இடத்திற்கு அருகில் திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டு, நுகால் கடற்கரையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டது. இந்தக் கப்பலில் துருக்கி ராணுவத்தின் மொகாதீச்சு பயிற்சி மையத்திற்கான ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட கப்பலில் 6 இந்தியர்கள், 1 துருக்கி நாட்டைச் சேர்ந்தவர், 1 ஜார்ஜியர் மற்றும் 2 செர்பிய பாதுகாப்புப் பணியாளர்கள் என மொத்தம் 10 பேர் பணியில் இருந்ததாக சோமாலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக கப்பலை கடத்திய 8 கொள்ளையர்கள், இதனை கர்மால் பகுதிக்குக் கொண்டு சென்றனர். இதற்கிடையே, துருக்கி நாட்டுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் அப்பகுதிக்கு வந்ததோடு, துருக்கி நாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.
செவ்வாய்க்கிழமை அன்று கப்பலுக்கு அருகில் வந்த ஒரு சிறிய படகு மூலமாகப் போதைப்பொருளான ‘காட்’ (khat) வழங்கப்பட்டது. அந்தப் படகு கரைக்குத் திரும்பியதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் அல்லது கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா என்பது குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. கப்பல் மற்றும் அதன் பணியாளர்களின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களைத் துருக்கி அரசு இன்னும் வெளியிடவில்லை.
சோமாலியாவில் வெடித்த வன்முறை – 4 பொதுமக்கள் பலி: மறுபுறம், சோமாலியாவின் தென்மேற்குப் பகுதியான பைடோவா நகரில் அரசுப் படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் குறைந்தது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 98 பேர் காயமடைந்தனர்.
மோதல்களால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில், திங்கள்கிழமை அதிகாலை அரசு நிலைகள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கர மோதலில் குறைந்தது 30 போராளிகள் கொல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



