தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.
மசாலா பொருட்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், தயிர், நெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.
திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீத வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.