பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
காதி மற்றும் கிராம தொழில் வாரியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான திட்டங்களும், சேவைத்தொழில்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான திட்டங்களும் அனுமதிக்கப்படும். பொது பிரிவு பயனாளிகளுக்கான மானியம் ஊரகப் பகுதியில் தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 25% எனவும், நகர் பகுதியில் தொடங்கப்படுவதற்கு 15% எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு மானியம் ஊரகப் பகுதியில் தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% எனவும், நகர்பகுதியில் தொடங்கப்படுவதற்கு 25% எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம். உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் திட்ட மதிப்பீடு இருந்தால் பயனாளி குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
PMEGO & SUFRTI திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகம் அமைக்க ரூ.20 லட்சம் வரை கடன் அனுமதி வழங்கப்படும். ரூ.2 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு பயிற்சி தேவையில்லை. ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு 5 நாட்களும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு நேரடியாகவோ இணையதளம் வாயிலாகவோ பயிற்சி பெற வேண்டும். இந்தத் திட்டத்திற்கு www.kviconline.gov.in/pmegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read more: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!