செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலக சாம்பியனான டி.குகேஷ், முன்னாள் உலக சாம்பியன்ஷிப் சவாலாளர் அலெக்சி ஷிரோவை (Alexei Shirov) 42 நகர்த்தல்களில் வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
அதேபோல், இரண்டாவது பலகையில் விளையாடிய அர்ஜுன் எரிகைசி, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஸ்பெயின் வீரர் மக்சிம் சிகேவை வீழ்த்தி இந்தியாவிற்கு ஆரம்பக் கட்ட முன்னிலையைப் பெற்றுத் தந்தார். ஆர்.பிரக்ஞானந்தா டேவிட் ஆண்டன் குய்ஜாரோவுடனும், நிஹால் சரின் ஜெய்ம் சாண்டோஸ் லதாசாவுடனும் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தன.
பெண்கள் பிரிவில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி வெற்றிப் பாதையைத் தொடர்ந்தது. பி.சவிதா ஸ்ரீ அனுபவம் வாய்ந்த முங்குன்டூல் பத்குயாக்கை வீழ்த்தி தனது தொடர்ச்சியான 4-வது வெற்றியைப் பதிவு செய்தார். உலகக் கோப்பை வெற்றியாளர் திவ்யா தேஷ்முக்கும் பாயாஸ்கலன் கிஷிக்பாதரை வீழ்த்தி இந்திய அணிக்கு அபார முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.
பெண்கள் அணியின் முன்னணி வீராங்கனைகளான கோனேரு ஹம்பி மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோரின் போட்டிகள் டிராவில் முடிந்தன. இருமுறை தங்கம் வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இந்தத் தொடரில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.
ஆண்கள் பிரிவின் பிற முக்கியப் போட்டிகளில் உஸ்பெகிஸ்தான் துருக்கியையும் (2.5-1.5), அமெரிக்கா உக்ரைனையும் (3.5-0.5), சீனா செர்பியாவையும் (3-1), ஜெர்மனி போலந்தையும் (2.5-1.5) வீழ்த்தின. அஜர்பைஜான் – செக் குடியரசு மற்றும் பிரான்ஸ் – ருமேனியா இடையேயான போட்டிகள் 2-2 என டிராவில் முடிந்தன.
பெண்கள் பிரிவின் பிற போட்டிகளில் உஸ்பெகிஸ்தான் அர்ஜென்டினாவையும் (3-1), சீனா ஹங்கேரியையும் (3.5-0.5), அமெரிக்கா ஸ்பெயினையும் (3.5-0.5), கஜகஸ்தான் அர்மேனியாவையும் (3-1) தோற்கடித்தன. மேலும் அஜர்பைஜான், போலந்து, ஜெர்மனி, ருமேனியா மற்றும் செர்பியா ஆகிய அணிகளும் தங்களது சுற்றுகளில் வெற்றி பெற்றன.



