திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமான நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி இருந்து வந்தார்.
இந்நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு கார்த்திகாவிற்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது, அதில் 2 பெண் குழந்தைகள், 1 ஆண்குழந்தை ஆகும் . ஒவ்வொரு குழந்தைகளும் 1¾ முதல் 2 கிலோ வரை இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 6 ஆண்டுகள் குழந்தையின்றி தவித்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது அந்த தம்பதி மட்டுமின்றி, அவர்களது உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.