தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 500- மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், பாதிக்கப்பட்ட மாணவனை வகுப்பறையிலேயே நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து, ஸ்கேல் மற்றும் ரப்பர் பேண்டுகளால் பிறப்புறுப்பில் அடித்து தாக்கியுள்ளனர். ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவியும், பபுள்கம்மை ஒட்டியும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்த அத்துமீறலை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலைவெறித் தாக்குதல் நடத்துவோம் என அந்த மாணவர்கள் மிரட்டியதால், பயந்துபோன சிறுவன் நீண்ட நாட்களாக மன உளைச்சலுடனும் தொடர் உடல்நலக் குறைவுடனும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். சிறுவனின் நிலையைப் பார்த்து சந்தேகமடைந்த சக ஆசிரியர் ஒருவர், விவகாரத்தை பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து பதறியடித்து வந்த மாணவனின் தாய், பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.
ஆனால், “விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம்; பையனுக்கு உடல்நிலை சரியாகும் வரை லீவு போட்டுக்கொள்ளுங்கள், இனிமேல் பார்த்துக் கொள்கிறோம்” என்று தலைமை ஆசிரியர் அலட்சியமாக பதிலளித்து விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியரின் பதிலால் விரக்தியடைந்த தாய், உடனடியாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் உடனடியாக களமிறங்கி தீவிர விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஓராண்டு காலமாகவே குறிப்பிட்ட 9 மாணவர்கள் இக்கொடூர சித்திரவதையை தொடர்ந்து செய்துவந்தது அம்பலமானது. இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்புடைய 9 பள்ளி மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களை தூத்துக்குடி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி, திருநெல்வேலியில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.



