சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பதால் கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. சீனா உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அது உலக சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை சீனா அதனை சற்றும் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.