அதிவேக ரயில்கள் உலகின் பல நாடுகளில் இருந்தாலும், சீனாவின் புல்லட் ரயில்கள் அதன் மென்மையான ஓட்டம், பொறியியல் நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகளால் தனித்தன்மை பெற்றவை. தற்போது, இந்த ரயில்களின் நிலைத்தன்மையை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பயண வீடியோ பதிவாலரான லவ்ப்ரீத் ஜக்கி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஜன்னலில் நாணயத்தை நிமிர்ந்தே வைத்தார். அந்த நாணயம் ரயில் பாய்ந்தபோதும் அசையாமல் நின்றது. இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள், சீனாவின் ரயில் தொழில்நுட்பத்துக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
இந்த பயணத்துக்காக அவர் மேற்கொண்ட ரயில் சுமார் 1,300 கி.மீ தூரத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடந்து சென்றதாகவும், இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு சுமார் ரூ.6,000 செலுத்தியதாகவும் லவ்ப்ரீத் கூறுகிறார். இந்த டிக்கெட்டில் சாய்வு இருக்கை, சீரான உணவு மற்றும் பெரிய ஜன்னல் மூலம் வெளிக்காட்சிகளை ரசிக்கும் வசதியும் இருந்ததாக அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பல்வேறு தளங்களில் பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். “சீனா 2050-ல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது!” என்று ஒரு பயனர் குறிப்பிட்டார். சீனாவில் ரயில்கள் எப்போதும் நேரத்தில் வரும். முன்பதிவுகள் எளிமையானவை, டிக்கெட் ரத்து செய்தால் கூட பணம் முழுவதும் திரும்பக் கிடைக்கும் என சீன ரயிலில் பயணித்த ஓர் இந்திய பயணி பதிவிட்டார். மற்றொரு பயனர் “சவுதி அரேபியாவில் 300 கி.மீ வேகத்தில் இதே நாணய முயற்சி செய்தேன்… அங்கேயும் அது வெற்றியடைந்தது!” என கூறினார்.
Read more: இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? தங்கம் விலை மேலும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?