அமெரிக்காவில் COVID-19 தொற்றின் புதிய வடிவமான BA.3.2 வகை பரவல் அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் துறை (CDC) உறுதி செய்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேகமாக பரவி வருவதால், இந்த புதிய வகைக்கு ‘சிகாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிகாடா பூச்சிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென அதிக அளவில் வெளிப்படுவது போல, இந்த வைரஸ் வகையும் மீண்டும் உருவெடுத்து பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய மாற்றம், தொற்று பரவல் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. புதிய BA.3.2 வகை COVID-19 வைரஸ் முதன்முதலில் தெற்கு ஆப்பிரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் 2025 ஜூன் மாதத்தில் முதல் பாதிப்பு பதிவானது.
ஆனால், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த வைரஸின் பரவல் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய வகை, ஒமைக்ரான் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் ஸ்பைக் புரோட்டீனில் சுமார் 70 முதல் 75 வரை உருமாற்றங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய வகைகளை விட மிகவும் அதிகமான மாற்றங்களைக் கொண்டதாக இருப்பதால், அதன் பரவல் திறன் குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது பயன்படுத்தப்படும் 2025–2026 காலத்திற்கான COVID-19 தடுப்பூசிகள், முந்தைய ஜேஎன்.1 (JN.1) வகையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘சிகாடா’ என அழைக்கப்படும் BA.3.2 வகை வைரஸில் சுமார் 75 உருமாற்றங்கள் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்த்து ஊடுருவும் திறன் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்குக் கூட மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், தடுப்பூசி பெற்றவர்களுக்கு பெரும்பாலும் தீவிர பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். புதிய BA.3.2 வகை COVID-19 வைரஸின் அறிகுறிகள், முந்தைய ஒமைக்ரான் வகைகளைப் போலவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அறிகுறிகள்:
- கடுமையான தொண்டை வலி மற்றும் இருமல்
- காய்ச்சல்
- உடல் சோர்வு மற்றும் தலைவலி
- மூச்சுத் திணறல்
- சிலருக்கு வாசனை மற்றும் சுவை இழப்பு
- அரிதாக, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள்
இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சோதனை செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



