திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் பாவா லட்சுமணன். குறிப்பாக வடிவேலு, விவேக் ஆகியோரது காமெடி காட்சிகளில் இவரை அதிகம் பார்க்க முடியும். சரத்குமாரின் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் இடத்தில் அம்மா, மாயண்ணே வந்திருக்காக… மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக… வாம்மா மின்னல் என இவர் பேசும் வசனம் மிக பிரபலம்.
சமீபகாலமாக பவா லட்சுமணன் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. பட வாய்ப்பில்லாததால் வருமானத்துக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் எனவும் பவா லெட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ’கலக்கப்போவது யாரு’ பாலா பவா லட்சுமணனை சந்தித்து அவருக்கு ரூ.30,000 பண உதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்று நான் சிறிய வயதிலிருந்து ரசித்த நகைச்சுவை நடிகர் அன்பு அண்ணன் பவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்து, என்னால் முடிந்த ரூ.30,000 கொடுத்தேன். கூடிய விரைவில் அன்பு அண்ணன் பூரண குணமடைந்து திரைப்படங்களில் நடிப்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.