கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மோடி தலைமையில் ஆட்சியை அமைத்த நாள் முதல், திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது, சற்றேற குறைய பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலங்கள் நிறைவடைய போகிறது. ஆனால் இன்னமும் பாஜகவை பற்றிய விமர்சனங்களை திமுக கைவிடவில்லை.
அந்த வகையில், சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பருதி இளம்வழுதியின் மகனின் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னுடைய தந்தை கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் என்றும், அவருடைய பேனா எப்போதெல்லாம் தலை குனிந்ததோ, அப்போதெல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சேது சமுத்திரத் திட்டம் வேலை வாய்ப்பு போன்றவை தொடர்பாக டி ஆர் பாலு போன்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர நரேந்திர மோடி பதிலளிப்பது இல்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அத்துடன் மதுரையிலிருந்து செங்கலை எடுத்து கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின் அதை வைத்து சென்ற சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். எனவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 2வது முறையாக உதயநிதி ஸ்டாலின் செங்கலை எடுத்துக்கொண்டு வலம் வரப்போகிறார் எனவும், தமிழகத்தை போல நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியல் வரும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார் என்று குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இதுவரையில் 15 ஆயிரம் ரூபாய் அல்லது 15 ரூபாய் கூட வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசிய உப்புமா கதை போலத்தான் இன்று மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.