திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியை சேர்ந்த கோபால் பெங்களூரு சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் யாமினி பிரியா (20). இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி பார்ம் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
கல்லூரி முடிந்து மதியம் 2 மணிக்கு வீடு திரும்பும் போது அங்கு வந்த இளைஞன் யாமினியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பிறகு தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்களில் வீசினார். இதனால் கண்களில் எரிச்சல் தாங்க முடியாமல் யாமினி கதறிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த யாமினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் யாமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் யாமினியை சுதந்திர பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர்தான் கொலை செய்தது தெரிய வந்தது. விக்னேஷ் யாமினியை ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் அவருடைய காதலை யாமினி ஏற்க மறுத்துவிட்டார். இருந்தாலும் தன்னை காதலிக்கும்படி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் விக்னேஷ் கல்லூரி முடிந்து வந்த யாமினியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இதற்கு முன்பு யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பெரும் சோகம்..!! உயிரை பறித்த ஒற்றை கல்..!! சாலை விபத்தில் தமிழ் சினிமா துணை நடிகர் மரணம்..!!



