ஹைதராபாத்தைச் சார்ந்த முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் அவரது கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கக்காட்டியா மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருபவர் தாராவதி ப்ரீத்தி. இந்த மாணவிக்கு அவருடன் பணிபுரியும் மூத்த மருத்துவர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமான டாக்டர் சைப் என்பவர் பணி ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி மருத்துவமனையில் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ப்ரீத்தியின் தந்தை தாராவத்தி நரேந்தர் ரயில்வே காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அந்த மாணவர் ப்ரீத்தியை தொடர் தொல்லை தருவது குறித்து தங்களிடம் இதற்கு முன்னரே புகார் அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். பணியின் போது சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் அவர் ப்ரீத்தியை அனுமதிப்பதில்லை எனவும் கூறி இருக்கிறார். பணியின் போது கழிவறைக்கு செல்வதற்கும் ப்ரீத்திக்கு சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தந்தை கூறியுள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று ப்ரீத்தி பணியில் இருந்து விரைவாக வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டதாகவும் அதற்கு மருத்துவர் சைப் அனுமதி மறுக்கவே ப்ரீத்தி மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் தலைவர் இந்த விவகாரத்தில் தகுந்த விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். தற்கொலை முயற்சி செய்து கொண்ட பிரீத்தியின் நிலைமை தற்போது வரை கவலைக்கிடமாகவே இருக்கிறது. தற்கொலை முயற்சி தொடர்பாக டாக்டர் சைப் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.