இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் LBW அவுட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் நிறைவடைவதற்குள் 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், இந்திய அணியின் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குஹ்ரிமென் வீசிய பந்தில் விராட் கோலி எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அவரது அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே இருந்த நிலையில் விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து, மூன்றாம் நடுவரிடம் விராட் கோலி ரிவ்யூ செய்தார். அதில், பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது தெரியவந்தது. இருப்பினும் மூன்றாம் நடுவரும் களத்தில் இருந்த நடுவரின் முடிவை போன்றே அவுட் கொடுத்தார்.
இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய பின்னர் விராட் கோலி தனது அவுட் குறித்து பயிற்சியாளர்களுடன் இருந்தபோது தொலைக்காட்சியில் பார்த்தார். அப்போது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ மற்றும் விராட் கோலிக்கு அவுட் கொடுத்த விவகாரம், அதற்கு விராட் கோலியின் ரியாக்ஷன் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.