அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாகவும், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை
சீனாவில் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், மூத்த குடிமக்கள் உள்பட நாட்டில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்தியாவில், 27 முதல் 28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், விமானப் போக்குவரத்துக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனத் தெரிவித்தார்.