‘லாலா’ புயலின் கோரத்தாண்டவம்.. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பு!

WhatsApp Image 2026 08 18 at 1.41.41 PM

உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இயற்கைப் பேரிடர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகின்றன. சில நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் புயல், கனமழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியாவிலும் பல மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், உலகளவில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்கள் மற்றும் எல் நினோ போன்ற வானிலை நிகழ்வுகளும் இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறித்த கவலையை அதிகரித்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை ‘லாலா’ புயல் கடுமையாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘லாலா’ முதலில் வெப்பமண்டல புயலாக உருவெடுத்து, பின்னர் ஹவாய் தீவுகளை நெருங்கும் போது கேடகிரி 1 புயலாக வலுப்பெற்றது. ஆகஸ்ட் 15-ம் தேதி பிக் ஐலேண்ட் பகுதியை கடந்து சென்ற இந்த புயல், பின்னர் மீண்டும் வலுவிழந்து வெப்பமண்டல புயலாக மாறியது. புயலின் மையப்பகுதி தீவில் நேரடியாக கரையை கடக்கவில்லை என்றாலும், அதன் பலத்த காற்றும் கனமழையும் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக பிக் ஐலேண்டின் தெற்கு பகுதிகளில் நிலைமை மோசமடைந்தது. நலேஹு, வையோஹினு, பஹாலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வீடுகள் சேதமடைந்ததுடன், சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், பல சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் சில சமூகங்கள் வெளிப்புறத் தொடர்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.

புயலுடன் பெய்த கனமழையின் அளவும் பல இடங்களில் அசாதாரணமாக இருந்தது. பிக் ஐலேண்டின் சில பகுதிகளில் 48 மணி நேரத்தில் 3.5 அடி அளவுக்கும் அதிகமான மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி மலைப்பாங்கான பகுதிகளிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்தது.

பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததுடன், மின்கம்பங்கள் மற்றும் மின்விநியோக கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இதனால் ஒருகட்டத்தில் ஹவாய் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தன. பின்னர் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.

இதனிடையே, புயலின் தாக்கத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார். தெற்கு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் காரணமாக மீட்புப் பணிகளிலும் சிரமம் ஏற்பட்டது. அவசரகால பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நலேஹு மற்றும் வையோஹினு போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. சில இடங்களில் வெள்ளநீர் வாகனங்களையும் அடித்துச் சென்றது. புயலுக்குப் பிறகும் மண் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மலைச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் தொடர்வதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அறுந்து விழுந்த மின்கம்பிகள் மற்றும் வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

லாலா புயல் தற்போது ஹவாய் தீவுகளை விட்டு மேற்கு நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்கட்டமைப்புகளில் ஏற்பட்ட பாதிப்பால் ஹவாய் மக்கள் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

Also Read: தவெகவுடன் இனி இணைந்தே பயணம்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு! விசிக மாநாட்டில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..

Saranya

Next Post

தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றி செல்லாது என தொடரப்பட்ட வழக்கு.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Tue Aug 18 , 2026
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற என். இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், இளையராஜாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட இளையராஜா வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த […]
4dc8ffcf930c4f47e06bdb69dfe6f238925803e9488400fc2c56e97fefeae6d7

You May Like