கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற என். இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், இளையராஜாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட இளையராஜா வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் மனுவில் சில குறைபாடுகள் இருப்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. குறிப்பாக, இளையராஜாவுக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் மனுவில் இடம்பெற்றிருந்ததால், அதனைத் திருத்தி புதிய மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு ஏற்கெனவே நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியிருந்தது. இதற்கிடையில், தமக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி இளையராஜா தரப்பிலும் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கீதா தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதன் மூலம் ஊத்தங்கரை தொகுதியில் இளையராஜா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 2026 தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் இளையராஜா 70,201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்செல்வம் 65,003 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் தொடர்பான வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்த்து, சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்புக்குள் அவற்றை முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இளையராஜாவின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது எம்.எல்.ஏ. பதவி தொடர்பான சட்டச் சிக்கல் தற்போது நீங்கியுள்ளது.
Also Read: ‘லாலா’ புயலின் கோரத்தாண்டவம்.. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பு!



