9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது இன்று தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்புயலாக வலுவடைந்து, நாளைதீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் ஆந்திர கடலோரப்பகுதிகளில், குறிப்பாக மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாககரையை கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,நாளை வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத் தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29 முதல் நவ.1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சி், ராணிப்பேட்டை,தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.



