ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது.
ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறதா, அந்த குற்றச்சாட்டு பணிநீக்கம் செய்வதற்கு உரியதுதானா என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்பு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தேவையற்ற தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஒருவேளை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக உரிய முடிவு எடுக்க வேண்டும்.
விசாரணை நடவடிக்கைக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கையை ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாக ரீதியிலான தாமதத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம். தவறு கண்டறியப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும். மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர்.
அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மேயில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்துள்ளது. எனவே இவ்விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.