தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
24 மணி நேரத்தில் ஒருவர் 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப்பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு பாதிப்பு காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் இருப்பவர்களுக்கு சுவாசிப்பதால் மட்டுமே தினசரி ஏற்படுவதாக அதிர்ச்சி தகவலும் கடந்த ஆண்டும் வெளியானது.
குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தடையை விதித்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. பின்னர், ஒன்றிய அரசும் அதற்கான புதிய சட்டங்களை பிறப்பித்தது.
டெல்லியில் சாலையில் இயக்கப்படும் இதுபோன்ற வாகனங்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்பட்டு உடைப்பதற்கு அனுப்பப்படுகிறது. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறை செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதுபோன்ற நிலையில், காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வழங்குவதை ஜூலை முதல் நிறுத்துமாறு கடந்த ஏப்ரலில் ஒன்றிய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், ‘டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாதியான வாகனங்கள் உள்ளன. அதில் 41 லட்சம் இருசக்கர வாகனங்களும், 18 லட்சம் 4 சக்கர வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்களுக்கு இனி பெட்ரோல். டீசலை பெட்ரோல் பங்குகள் வழங்காது. டெல்லியில் உள்ள 520 பெட்ரோல் பங்குகளிலும் அடுத்த மாதம் முதல் இதுபோன்ற வாகனங்களை கண்டறிவதற்கான தானியங்கி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, செயல்பட உள்ளன.
பெட்ரோல் பங்குகளில் காலாவதியான வாகனங்கள் நுழைந்தால், இந்த கேமிராக்கள் அவற்றை கண்டுபிடித்து தகவல் கொடுத்து விடும். பின்னர், வாகனத்தின் ஆயுட்காலம் தெரிய வந்தால் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
Readmore: பெண்ணின் கருப்பையில் இருந்த 18 கிலோ கட்டி!. அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!