இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்ந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதாவது ஹைப்பர் கிளைசீமியா இருக்கும்போது, நீரிழிவு நோயாளிகளுக்கு சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக தாகம்: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தாகம் தீரவே செய்யலையா? இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தாகம் அதிகரிக்கும். இரவில் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
சோர்வு: நீங்கள் ஒவ்வொரு இரவும் சோர்வாக இருக்கிறீர்களா? இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடும். இதனால் உடலுக்கு போதுமான சக்தி கிடைக்காது. இரவில் போதுமான ஓய்வு எடுத்த பிறகும் நீங்கள் சோர்வாக உணர்ந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்.
வியர்வை: பகலில் கடினமாக உழைக்கும்போது வியர்ப்பது இயற்கையானது. ஆனால் இரவில் அதிகமாக வியர்த்தால் கவனமாக இருங்கள். இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அளவு மாறும்போது உடல் வெப்பநிலையும் மாறுகிறது. இதனால் வியர்வை அதிகமாக வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்: இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீர் கழிப்பது அதிகரிக்கும். இது தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மூச்சுத்திணறல்: தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறியாகும். இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி அதிகமாகக் காணப்படுகிறது. இரவில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
Read more: தற்போது பரவும் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது..!! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்