அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். அப்போது அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு விறுவென ஏறிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அதனை கண்டு கொள்ளாமல் வடமாநில வாலிபர் சட்டையை கழற்றி கையில் வைத்தபடி கிழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர், அவர்கள் வடமாநில வாலிபரிடம் பேச்சு கொடுத்து கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், அந்த வாலிபர் இந்தியில் பேசியதாலும், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தமிழில் பேசியதாலும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், வாலிபர் கீழே குதித்தால் காப்பாற்றுவதற்காக அங்கு பெரிய வலையை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், அந்த வாலிபர் திடீரென மேற்கூரையின் மற்றொரு பக்கத்துக்கு ஓடி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை, கை, காலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.