கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வது தொடர்பாக இருவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சதீஷ் என்கிற சக்திகுமார் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில், சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் முத்துப்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் முத்துப்பாண்டி, அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக வைத்திருந்தார்.

இதனிடையே, அந்த பெண்ணுடன் ஏற்கனவே சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், முத்துப்பாண்டி அங்கு வருவதை பிடிக்காத சதீஷ், அந்த பெண்ணிடம் பேசுவதை விட்டுவிடும்படி முத்துப்பாண்டியை கண்டித்துள்ளார். மேலும், உங்கள் உறவை பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் முத்துப்பாண்டி. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த பெண்ணின் வீட்டுக்கு முத்துப்பாண்டி சென்றுள்ளார்.

இதை தனது வீட்டு வாசலில் நின்று பார்த்த சதீஷ், அவரை அழைத்து, இங்கு வராதே என்று எச்சரித்தும் நீ கேட்கவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சதீஷ் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்த கத்தியுடன் முத்துப்பாண்டி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.