தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசகநாயக்கனூர் ஊராட்சி உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி சபரி சூர்யா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறுமியின் பெற்றோர் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வருவதால், சிறுமி தனது தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்துள்ளார். சபரி சூர்யாவின் தாய் அமலா புஷ்பம், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆயாவாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால், அங்கன்வாடி மையத்துக்கு பாட்டியுடன் சிறுமி வேலைக்கு சென்றுள்ளார். பாட்டியும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது பள்ளி மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று ஒரு அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி ஆடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பம் உடனடியாக தீயை அணைத்து சிறுமியை மீட்டார். ஆனால், தீயினால் சிறுமியின் வயிறு மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. சம்பவத்தையடுத்து உடனடியாக சிறுமியை அவரது பாட்டி சின்னமானூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியில் இருந்த வில்லயகுமார் (16) என்ற சிறுவன், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமி சத்தம் போட்டு அவரை பயமுறுத்த தீக்குளித்தது தெரியவந்தது. இந்த வழக்கில் சிறுவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.