கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்திய மாநகராட்சி அதிகாரிகளை, நகைக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை சென்னை மயிலாப்பூர் பஜார் சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். அப்போது, அதே பகுதியில் இயங்கி வந்த சாந்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். இதனை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
![மாஸ்க் போட சொன்ன அதிகாரியை குத்துவிட்ட நகைக்கடை உரிமையாளர்..! கடையை இழுத்து மூடி சீல் குத்திய அதிகாரிகள்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-15-at-5.28.59-PM-1024x683.jpeg)
மேலும், நகைக்கடையில் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை. அதேபோல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படாததும் தெரியவந்ததால், கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷ் குமாரிடம் கூறிவிட்டு, அபராதம் விதிக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே கடை உரிமையாளர் சந்தோஷ்குமார், மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளியின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
![அதிகாரியை தாக்கிய நகைக்கடை உரிமையாளர்..! கடையை இழுத்து மூடி சீல் குத்திய அதிகாரிகள்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-15-at-5.28.59-PM1.jpeg)
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சந்தோஷ் குமார் மீது புகார் அளித்தனர். இதற்கிடையே, இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அந்த நகைக்கடையில் சோதனை செய்தபோது கடையின் உரிமம் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்திருந்ததும், உரிமம் புதுபிக்காமல் கடையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு காலவரையறையின்றி சீல் வைத்துச் சென்றனர். மேலும், அதிகாரியை தாக்கிய வழக்கில் சந்தோஷ்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.