ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்று பாஜக பொது செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. இதனிடையே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே பாஜகவிடம் ஆதரவு கோரியிருந்தனர்.. ஆனால் பாஜக தனது நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளது..
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இந்த சூழலில் நேற்று டெல்லி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார்.. அப்போது தமிழ்நாடு அரசியல் குறித்து அவருடன் பேசியதாக கூறப்படுகிறது..
டெல்லி பயணத்திற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தார்.. அவருடன் கரு.நாகராஜன், சி.டி ரவி ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்..
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அகில இந்திய பொது செயலாளர் சி.டி ரவி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய சி.டி. ரவி “ ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. மு.க ஸ்டாலின் அரசு நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது.. திமுக அரசு ஒரு குடும்பத்திற்காக செயல்பட்டு வருகிறது.. தமிழக மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.. திமுக அரசு, மின் கட்டணம், சொத்து வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக அரசு பணபலத்தையும், அதிகாரப்பலத்தையும் பயன்படுத்தி வருகிறது..
இந்த இடைத்தேர்தலில் திமுக எனும் தீய சக்தியை அழிக்க அதிமுக, பாஜக ஆகியவை தேவை.. இன்று காலை முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தேன்.. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சமரசம் செய்ய முயற்சித்தோம்.. ஒருங்கிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியும்.. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் ஒன்றாக இணைந்து பணியாற்ற கூறினோம்.. திமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடையும்..” என்று தெரிவித்தார்..
இந்த தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சி.டி. ரவி “ பிப்ரவரி 7-ம் தேதி வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்தார்.. எனவே பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு இன்றும் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த முடிவை இன்று பாஜக சொல்லவில்லை..