தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன..
இந்த நிலையில் SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் கோவையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது..
இந்த நிலையில் திமுக மக்களை ஏமாற்றுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகிறார்.. பாஜக ஏதோ பூதத்தைக் கொண்டு வந்தது பொல கொடி பிடித்து திமுகவினர் போராட்டம் நடத்துவது ஏன்? கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது திமுக அரசு.. ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்..
இதற்கு முன்பு SIR நடைபெறவில்லையா? 2000க்கு முன் 10 முறையும், 2000-க்கு பின் 3 முறையும் SIR நடைபெறுகிறது.. SIR என்றால் என்னவென்றே துணை முதல்வர் உதயநிதிக்கு தெரியவில்லை.. ரிவிஷனை, ரெஸ்ட்ரிக்ஷன் என்று உதயநிதி கூறுகிறார்..
நாட்டில் 13 முறை SIR நடந்துள்ளது அப்போதெல்லாம் இவர்கள் எதுவும் சொல்லவில்லை… ஆனால் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் SIR வேண்டாம் என்று கூறுகின்றனர்.. வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம்.. எனவே இப்போது SIRக்கு எதிராக பேசி வருகின்றனர்..” என்று தெரிவித்தார்..



